Samayam Tamil | Updated: 09 Dec 2019, 01:14:04 PM
நிதி நெருக்கடி காரணமாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் பள்ளிக் கல்விக்கான திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் மத்திய நிதியமைச்சகம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆலோசனை செய்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தரப்பிலிருந்து பள்ளிக் கல்விக்கான முழு நிதியையும் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு திடீரென இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இத்தகவலை மறுத்திருந்தாலும், அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாகவே பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், திடீரென நிதியைத் திரும்பப் பெற அரசு முடிவுசெய்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் கல்வித் துறைக்காக ரூ.46,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.9,000 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரூ.3,000 கோடியை அரசு திரும்பப்பெறப்போகிறது என்ற அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tags
school News