எதிர்வரும் மத்திய நிதி நிலை அறிக்கையில் ரூ. 5 லட்சம் வருவாய் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்  எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ 5 லட்சத்து 1 முதல் 10 லட்சம் வரை 10 சதவிகித வருமான வரியும் ரூ. 10 லட்சத்து 1 முதல் ரூ. 20 லட்சம் வரை 20 சதவிகித வரியும் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் எனில் 30 சதவிகித வருமான வரியும் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான வருலாயுள்ளோருக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 5 முதல் 20 சதவிகித வரிவிதிப்பு காரணமாக தனிநபர்கள் கைகளில் பெறக் கூடிய பணத்தின் அளவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

புதிதாக அறிவிக்கப்படும் வருமான வரிக் குறைப்பு காரணமாக தனிநபர்களின் வருவாய் அதிகரிப்பதுடன், நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் செலவு செய்யும் திறனும் உயர வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது.

2019 நிதி நிலை அறிக்கையில் கூடுதல் வரி விகிதங்கள் கணிசமான அளவு உயர்த்தப்பட்டதன் காரணமாக அதிக வருவாயுள்ள பிரிவினருக்கான வரி விகிதம் 35.88 சதவிகிதத்திலிருந்து 42.74 சதவிகிதம் வரை அதிகரித்து, அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது.