கனவு ஆசிரியர் - விகடன்

மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்கள். காற்று பற்றிய கேள்விக்கு, ஒரு மாணவனுக்கு பதில் நன்றாகத் தெரியும். ஆனால், அந்த நேரத்தில் மறந்துவிட்டது. யோசித்தான், எதிரே மேஜை மீது இருந்த பேப்பர் கட்டில், ஒரு பேப்பர் காற்றில் பறந்துகொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவனுடைய அறிவியல் ஆசிரியர், ஒரு பேப்பரை வைத்து காற்று பாடம் நடத்தியது நினைவுக்கு வந்ததும் பதில் நினைவுக்கு வந்துவிட்டது. அந்த அறிவியல் ஆசிரியர்தான் அன்பழகன்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், 1-3 பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் அன்பழகனை, சக ஆசிரியர்கள் 24 ஙீ 7 அறிவியல் ஆசிரியர் என்றுதான் அழைக்கிறார்கள். அறிவியல் பற்றிய சந்தேகங்களைத் தீர்த்துவைக்க, எந்த நேரமும் அன்பழகன் சுணங்குவதே இல்லை. ''அறிவியல் பாடங்கள் அனைத்தையும் எளிய அறிவியல் சோதனைகளாக நடத்த முடியும்'' என்கிறார்.

''நடத்த இருக்கும் பாடம் பற்றிய சில அடிப்படைச் செய்திகளைக் கூறிவிட்டு, சோதனையைச் செய்ய வைப்பேன். அதில் இருந்து மாணவர்களுக்குத் தோன்றுவதைச் சொல்லச் சொல்லும்போது, அவர்கள் என்னையே ஆச்சரியப்படுத்துவார்கள். அதன் பிறகு அந்தப் பாடத்தை நடத்துவேன்'' என்கிறார்.

பள்ளிகளில், 'அறிவியல் உபகரணங்களை எப்படிப் பயன்படுத்துவது’ என்று சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் சுப்பையா பாண்டியன் எழுதியதை, அனிமேஷன் படமாக மாற்றியதில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது.




''சென்னையில் உள்ள 'எவரெஸ்ட் எஜு சிஸ்டம் சொல்யூஷன் அண்ட் பிரைவேட் லிட்’ எனும் தொண்டு நிறுவனம் 400 அறிவியல் சோதனைகளைத் தயாரித்து வைத்திருந்தது. அதில் 40 சோதனைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதை அரசு அனுமதியோடு தமிழ்நாடு முழுவதும் பள்ளி ஆசிரியர்களிடம் கொண்டுசேர்க்கும் பணிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது, எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன'' என்றார்.

''எங்கள் பள்ளியும் எவரெஸ்ட் நிறுவனமும் இணைந்து, நியூட்டன் அறிவியல் மன்றம் அமைத்திருக்கிறோம். மாதந்தோறும் போட்டிகள் நடத்துகிறோம். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 11 பள்ளிகளில் இருந்து மாணவர்களை அழைப்போம். ஒரு தலைப்பில் ஐந்து விதமான போட்டிகள் நடத்தி, பரிசுகள் தருவோம். வருடம் முழுவதும் அதிகப் பரிசுகள் பெரும் பள்ளிக்கு வெற்றிக் கோப்பை வழங்குகின்றோம்'' என்கிறார்.

தமிழ்நாடு அரசு பள்ளி 2004-05-ல் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி அளித்தது. அதில் கலந்துகொண்ட அன்பழகனுக்கு 2011-ல், மாநில அளவிலான விருதை அளித்திருக்கிறது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

2012-13 -ம் ஆண்டுக்கான தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இவரது மாணவி கலையரசி, இளம் விஞ்ஞானியாகத் தேர்வாகியிருக்கிறார். இந்தப் பள்ளியின் பிற மாணவர்களும் மாநில அளவிலான அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற அன்பழகனின் பங்கு பிரதானமானது.

உத்திரமேரூருக்கும் ஜப்பானுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதாமே என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே...

''கனெக்ட்டிங் கிளாஸ் திட்டத்தில் ஜப்பான் பள்ளியுடன் தொடர்பில் இருக்கிறோம். யிமிசிகி திட்டத்தில் சப்போரா என்ற இடத்தில் நடைபெற்ற தொடக்கக் கல்வியில் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்துக்கான பாடத்திட்டத்தினை மேம்படுத்துவதற்கான பயிற்சியில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவின் சார்பில் நான் மட்டுமே தேர்வானேன். ஜப்பானில் 45 நாட்கள் நடந்த பயிற்சிகளில் கலந்துகொண்டேன். அங்கு வகுப்புகள் நடக்கும்முறை, பாடம் நடத்தும் விதம் இவை எல்லாம் எனக்குள் பல மாற்றங்களையும் நம்பிக்கையையும் விதைத்திருக்கின்றன'' என்றார்.

அன்பழகன் போல எளிய சோதனைகளால் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தால், தேர்வு பயமே இருக்காது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post